முகப்பு
தற்போதைய செய்திகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Updated On : 20 செப்டம்பர் 2019, 12:50 pm IST
பகிர்:


சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவ,ர் கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வினை தொடர்ந்து எழுதினார். நிகழாண்டு நடைபெற்ற தேர்வில் 385 மதிப்பெண்கள் பெற்று அவர் தேர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கலந்தாய்வில் தேனி மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்து அங்கு அவர் சேர்ந்து படித்து வந்தார்.

இந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கும், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கும் புகார் ஒன்று வந்தது. உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

மேலும், அவரது நீட் தேர்வு நுழைவுச் சீட்டிலும், கலந்தாய்வு மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்திலும் வேறு வேறு புகைப்படங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் 4 பேர் கொண்ட பேராசிரியர் குழுவை அமைத்து விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார். அந்த விசாரணையில், அந்த மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி சார்பில் அந்த மாணவருக்கு எதிராக தேனியில் உள்ள காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்ட நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும்.  

மேலும், நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை. மத்திய அரசுதான் நடத்தியது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.