மணப்பாறையில் முகக்கவசம் இன்றி வலம்வரும் மக்கள்!
மணப்பாறையில் ஊரடங்கை மீறி முக கவசம் அணியாமல் அலட்சியப்போக்குடன் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பொதுமக்கள் உலா வருகின்றனர்.
மணப்பாறையில் ஊரடங்கை மீறி முக கவசம் அணியாமல் அலட்சியப்போக்குடன் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பொதுமக்கள் உலா வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமுலில் உள்ள ஊடரங்கையடுத்து, காவல்துறை சார்பில் தேவையின்றி வாகனங்களில் உலா வரும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அனேக இடங்களில் காவல் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க அடையாள அட்டை அளிக்கப்பட்டும், வாகன தணிக்கை செய்யப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மணப்பாறை பொதுமக்களிடம் அலட்சியப்போக்கும், சமூக அக்கறையின்மையும் அதிகரித்து வருகிறது. இன்று காலை பேருந்துநிலையம், இரயில்வே நிலையம் சாலை, மாரியம்மன்கோயில் என நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் உலா வரும் பொதுமக்களை அதிக அளவில் காண முடிந்தது.
மேலும் அவர்களில் முக கவசம் அணிவது குறித்து அதிகரிக்கும் அலட்சியப்போக்கும், ஆபத்தை உணராமல் இருப்பதும் சமூக ஆர்வலர்களிடம் முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என இருச்சக்கர வாகனங்களில் குடும்பத்தினருடன் உலா வரும் பொதுமக்களும், ஊரை சுற்றி வரும் வாலிபர்களும் முக கவசமின்றி இருப்பதையடுத்து கரோனா ஆபத்தை உணரும் வகையில் மாவட்ட நிர்வாகம் கட்டுபாடுகளை கடுமையாக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.