அறக்கட்டளைகள் சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரணம்
திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் மற்றும் தனியார் அறக்கட்டளைகள் சார்பில் நலிவடைந்த 300 குடும்பங்களுக்கு அரிசி, துவரம் பருப்பு மற்றும் மளிகை பொருள்கள் ஆகியவை கரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.
திருவள்ளூர், ஆக.3: திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் மற்றும் தனியார் அறக்கட்டளைகள் சார்பில் நலிவடைந்த 300 குடும்பங்களுக்கு அரிசி, துவரம் பருப்பு மற்றும் மளிகை பொருள்கள் ஆகியவை கரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.
கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதனால், ஏழை எளிய நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
இதுபோன்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரணம் வழங்கவும் முன்வந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் சார்பில் திருப்பணி அறக்கட்டளை, அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Advertisement
இந்த நிகழ்ச்சியில் திருப்பணி அறக்கட்டளை நிர்வாகி காளிரத்தினம், ஐ.ஆர்.சி.டி.எஸ் ஒருங்கிணைப்பாளர் பழனி ஆகியோர் நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி, துவரம் மற்றும் 12 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட்டது.
இதேபோல், பூண்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் 300 நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி, துவரம் பருப்பு, மளிகை பொருள்கள், முககவசம் மற்றும் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டது.