கேரள கனமழை நிலச்சரிவு: நடமாடும் மருத்துவக்குழு அனுப்பிவைப்பு
கேரளத்தில் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், 15 அவசர ஊர்திகளுடன் நடமாடும் மருத்துவக்குழுவினர் அனுப்பிவைப்பு
திருவனந்தபுரம்: கேரளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், 15 அவசர ஊர்திகளுடன் நடமாடும் மருத்துவக்குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் பருவமழை தொடங்கி தொடர் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, கோழிக்கூடு ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிக அளவிலான மழையால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தின் ராஜமாலா பகுதியில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் நிலச்சரிவு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா பேசியதாவது, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு 15 அவசர ஊர்தி வாகனங்களுடன் நடமாடும் மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேவை ஏற்பட்டால் மேலும் சில மருத்துவ குழுவினர் ராஜமாலா பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
மேலும், இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.