மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பின்புற பாதை வழியாக (5 எண் கேட்) கார் ஒன்று வந்தது. அந்தக் காரின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாததால் பாதுகாப்பு படையினர் காரை சுற்றி வளைத்தனர்.
காரை சோதனையிட்டபோது அதில் 6 பேர் பயணம் செய்து வந்திருந்தனர். காரின் பின்பகுதியில் திருச்சி எண் இருந்தது. விசாரணையில் அவர்கள் சென்னை செல்வதற்காக வந்ததாக தெரிவித்தனர்.
மேலும் அவர்களது உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. பிரதான பாதை வழியாக வராமல் பின்பக்க பாதை வழியாக வந்ததால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
சோதனையில் அவர்கள் பயணிகள் என தெரியவரவே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களை விமான நிலையத்திற்குள் அனுமதித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு நிலையில் கார் ஒன்று விமான நிலையத்தின் பின்பக்கமாக வந்தது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.