முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர், துணை முதல்வருடன் அடுத்தடுத்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அதிமுகவில் நடைபெற்ற குழப்பங்களை நாடே அறிந்தது.  இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என அக்கட்சியில் அமைச்சர்கள் முதல் கட்சி தொண்டர்கள் வரை பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுகவின் முதல்வரை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி தேர்வு செய்வோம் என்று கூறியதே தற்போதைய விவகாரத்திற்கு பிள்ளையார் சுழியானது.

அவரைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்களான ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் என ஒவ்வொருவரும் பல கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் கூடி பேசிய கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். உரிய நேரத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதையெல்லாம் அறிவிப்போம் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். இருப்பினும் அதிமுகவின் ஒவ்வொருவரும் தங்களது பங்கிற்கு அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து கருத்துத் தெரிவித்ததை அடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. 

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களால் தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூர் என மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 2021 இல் தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர், தேனி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. 

முன்னதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மகன் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில்,சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்களான ஜெயகுமார், தங்கமணி, செங்கோட்டையன், சிவி சண்முகம், கேசி.வீரமணி உள்ளிட்ட 10 அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். 

முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற மூத்த அமைச்சர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். 

இதனிடையே தேனி மாவட்டம் முழுவதும் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் பழனிசாமியை சந்தித்த மூத்த அமைச்சர்கள், அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கலாம் எனவும் அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →