முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையம் வனச்சரகத்தில் ஒரே தோட்டத்தில் தொடர்ந்து 5ஆவது கரடி பிடிபட்டது

கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் உள்ள தோட்டத்தில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை  அதிகாலை 5ஆவது கரடி பிடிபட்டது. இது கடையம் வனச்சரகத்தில் பிடிபட்ட 9 ஆவது கரடியாகும்.

Updated On : 3 ஜூலை, 2020 at 9:26 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

அம்பாசமுத்திரம்: கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் உள்ள தோட்டத்தில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை  அதிகாலை 5ஆவது கரடி பிடிபட்டது. இது கடையம் வனச்சரகத்தில் பிடிபட்ட 9 ஆவது கரடியாகும்.

களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட வனப்பகுதியில் இருந்து, காட்டுப்பன்றி, கரடி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மலையடிவரத்திலுள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தியதோடு மக்களையும் அச்சுறுத்தி வந்தன. குறிப்பாக பங்களா குடியிருப்பு, சிவசைலம், அழகப்பபுரம், கருத்தப்பிள்ளையூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் கரடிகள் மா, பலா, தென்னை உள்ளிட்டவற்றை  நாசப்படுத்தியதோடு குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தன. 

இதுகுறித்து வந்தப் புகாரையடுத்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தன. 

Advertisement

இதையடுத்து விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவற்றைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. இதில் ஏப்ரல் 29, மே 31 ஜூன் 12 ஆகிய நாள்களில் மூன்று கரடிகள் பிடிபட்டன. ஜூன் 16 ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு கரடிகளும் ஜுன் 21, 23 மற்றும் ஜூலை 1 ஆம் தேதி ஒரு கரடியும் பிடிபட்டன. 

இந்நிலையில் தொடர்ந்தும் கரடி நடமாட்டம் இருந்ததால் முதலியார்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் கூண்டு வைக்கப்பட்டது. இதில் வெள்ளிக்கிழமை அதிகாலை கரடி ஒன்று சிக்கியது. கூண்டில் பிடிபட்ட கரடியை துணை இயக்குநர் கொம்மு ஓங்காரம் தலைமையில் வனச்சரகர் நெல்லைநாயகம் வன வர் முருகசாமி உள்ளிட்டோர் முண்டந்துறை வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒரே இடத்தில் 5 கரடிகள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கடையம் வனச்சரகத்தில் 70 நாட்களில் பிடிபட்ட 9 -ஆவது கரடியாகும். வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி முதலியார்பட்டியில் பிடிக்கப்பட்ட 4 ஆவது கரடியாகும்

இது குறித்து வனச்சரகர் நெல்லைநாயகம் கூறும்போது, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டத்தை அறிந்து அவற்றை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபடுவதோடு, சில இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படுகின்றன. எனவே பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.