வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் பேச நளினி , முருகன் அனுமதி கோரிய வழக்கு: மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவு
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச ஒரு நாள் அனுமதியளிப்பது தொடர்பாக பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் பேச ஒரு நாள் அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் காணொலி மூலம் பேச அனுமதிக்கக் கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவில், ”முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எனது மகள் நளினியும், மருமகன் முருகனும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். வேலூர் சிறையில் இருவரும் இருந்து வந்த நிலையில் முருகனின் தந்தை இலங்கையில் காலமானார். இறந்த தனது தந்தையின் உடலை காணொலி காட்சி மூலம் காண அனுமதி வழங்க கோரிய முருகனின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
எனவே இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், லண்டனில் உள்ள அவரது மூத்த சகோதரியிடமும் தினமும் 10 நிமிடங்கள் காணொலி வசதி மூலம் பேச அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
”தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஏன் பரிந்துரை செய்யவில்லை?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், குறிப்பிட்ட இந்த வழக்கில் முடிவெடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு திங்கள்கிழமை நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ,மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு கைதிகளை வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் நளினி முருகன் ஆகியோருக்கு, வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் பேச ஒரு நாள் மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் இதுகுறித்து குறித்து வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.