மணப்பாறை அருகே பெண் குழந்தை மீட்பு
மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தத்தில் கூடையில் வைத்து விட்டு சென்ற பிறந்து 3 மாதமே ஆன மாற்றுத்திறனாளி பெண் குழந்தை மீட்பு.
மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தத்தில் கூடையில் வைத்து விட்டு சென்ற பிறந்து 3 மாதமே ஆன மாற்றுத்திறனாளி பெண் குழந்தை மீட்பு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை சேத்துப்பட்டி பேருந்து நிறுத்தத்தில், அருகில் யாருமில்லா நிலையில், கூடையில் குழந்தை ஒன்று இருப்பதாக துவரங்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் ஜெயதேவி தலைமையிலான காவலர்கள் குழந்தையை மீட்டெடுத்தனர்.
கூடையில் பிறந்து சுமார் 3 மாதமே ஆன மாற்றுத்திறனாளி பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. பார்வை குறைபாடு, கால்கள் முடம், மூளை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றில் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அதனையடுத்து திருச்சி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குழந்தைக்கு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த காவல் துறையினர், காவல்நிலையத்திற்கு வந்தடைந்த சைல்டு லைன் அமைப்பினரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
கடந்த 7-ஆம் தேதி துவரங்குறிச்சி காவல் நிலையம் அருகிலேயே 10 மாத பெண் குழந்தை முட்புதர்களில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே காவல் சரகத்தில் 3 மாத பெண் குழந்தை மீட்பு சம்பவம், தவறான பாதையில் செல்லும் ஜோடிகளின் மனிதாபிமானமற்ற செயலாக மீண்டும் மீண்டும் பதிவாகி வருகிறது.