ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள்: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த நிரந்தர திட்டம் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளை ஒழுங்குப்படுத்த நிரந்தர திட்டம் ஏதாவது உள்ளதா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது.இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.
ஆன் லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைகிறது. எனவே அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்க வேண்டும். அதுவரை ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்.
Advertisement
தமிழகத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி உள்ளது. ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதால் நகர்புற, கிராமப்புற மற்றும் ஏழை பணக்கார மாணவர்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும் முறையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களையும், இடையூறுகளையும் சந்திக்கின்றனர். எனவே மாணவ மாணவிகள் ஆபாச இணையதளங்களை பார்ப்பதை தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவும் எதுவும் பிறப்பிக்க முடியாது. ஆன் லைன் மூலம் கற்பிக்கப்படும் வகுப்புகளை ஒழுங்குபடுத்த நிரந்தர திட்டம் ஏதாவது உள்ளதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 20 -ஆம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.