இளையான்குடி அருகே மின்னல் தாக்கி பெண் பலி
இளையான்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி பெண் பலியானார்.
இளையான்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கி பெண் பலியானார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்ததால் பொதுமக்கள் புழுக்கம் தாங்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந் நிலையில் திடீரென ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து சாரல் விழத்தொடங்கி பின்னர் பலத்த மழையாக மாறியது.
இந்த மழையால் இளையான்குடி பகுதியில் குளிர்ச்சி நிலவியது. வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இந்த மழை இதமாக இருந்தது. இதற்கிடையில் இளையான்குடி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில் சேதுராஜ் மனைவி பாலாமணி(42) இப் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
அப்போது மின்னல் தாக்கியதில் பாலாமணி மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.