தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், சாலைகளில் வழக்கம் போல வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் குறைந்த. எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மளிகை மற்றும் காய்கனிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடை, ஜவுளிக்கடை, நகைக் கடை, வீட்டு உபயோகப் பொருள்கள் கடை, அலங்காரப் பொருள் கடை, பெட்டிக்.கடை, சாலையோர உணப் பொருள் விற்பனைக் கடை ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தேனியில் நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி பிரதானச் சாலைகளில் வாகனப் போக்குவதத்து மற்றும் மக்கள் நடமாட்டம் வழக்கம் போலவே இருந்து வருகிறது. தேனி, பத்திரப் பதிவு அலுவலகம் சாலையில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
நகராட்சி எல்லையில் காவல் துறையினர் சோதனைச் சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக 10 ஆட்டோக்களை தேனி காவல் நிலைய காவலர்கள் பறிமுதல் செய்தனர். அவசியத் தேவைகளின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக இதுவரை 20 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
தேனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் மட்டுமின்றி பழனிசெட்டிபட்டி, அன்னஞ்சி, அரண்மனைப்புதூர் ஆகியவறிலும் பிரதானச் சாலைகளில் உள்ள தேநீர் கடை மற்றும் பெட்டிக் கடைகளை மூட காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.