விழுப்புரம்: சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமதுரை காலனியில் எரித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீ(15) இல்லத்திற்கு, இன்று புதன்கிழமை பாஜக மாநில தலைவர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், நேரில் சென்று ஆறுதல் கூறினர். அப்போது கட்சியின் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உயிரிழந்த ஜெயஸ்ரீயின் வழக்கை காவல்துறை விரைந்து விசாரணை செய்து, விரைவு நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனையை பெற்றுத்தர வேண்டும். ஜெயஸ்ரீயின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கரோனோ நோய்த் தடுப்புப் பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது. ஆனால், திமுக களத்தில் நின்று பணி செய்யாமல், பேரிடரிலும் அரசியல் சுய லாபத்திற்காக தமிழக அரசை குறை சொல்லிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.