கேரளத்தில் உள்ள சபரிமலையின் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படவுள்ளது, இந்நிலையில் நாளொன்றுக்கு 1,000 பக்தர்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் சுவாமியின் நடை, பக்தர்கர்களின் தரிசனத்திற்காக ஆண்டுதோறும் 3 மாதங்கள் திறக்கப்படும். இதையடுத்து இந்த வருடம் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
கரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நெறிமுறைகளை கூட்டம் சேரும் இடங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது.
கேரளத்தில் தற்போது கரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சபரிமலை நடை திறக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் இருந்து நடைத்திறக்கும் காலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இந்த வருடம் நாளொன்றுக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்ட செய்தியில்,
நடை திறந்தபின் ஆரம்பக் காலங்களில் நாளொன்றுக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வார இறுதி நாள்களில் 2 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். மண்டலப் பூஜை மற்றும் மகர விளக்கின் போது 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தரிசனத்திற்கு 24 மணிநேரத்திற்கு முன் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். தொற்று இல்லை என்ற எதிர்மறை சான்றிதழ்கள் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.