திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விழிப்புணர்வு பரப்புரை
திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
நாமக்கல்: திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தின் தொடர்ச்சியாக பழைய பேருந்து நிலைய அண்ணாசிலை அருகில் புதன்கிழமை விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.
சிறு குறு தொழில் நிறுவனங்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து தொழிலை தொடர்ந்து நடத்த அவர்களது தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியில் நிபந்தனைகளை தளர்த்தி கடன் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.
நடுத்தர தொழில்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு வங்கிக் கடன்கள் மீதான வட்டி கூட்டு வட்டி அபராத வட்டி என அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவர்களின் வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
கிராமப்புற நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்தவேண்டும்.
தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். நகரங்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். வேலை இல்லாமல் தவித்து வரும் உடலுழைப்புத் தொழிலாளர் களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க புதிய நகர்ப்புற வேலை உறுதியளிப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
மின்சார திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், விவசாயிகள் அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு விலை உத்திரவாதம் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகர மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.