கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைக்கு சிகிச்சை அளிக்காததால் பலி
உத்தரகண்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க மூன்று மருத்துவமனைகள் மறுத்ததால் அவர் சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரகண்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க மூன்று மருத்துவமனைகள் மறுத்ததால் அவர் சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரகண்டில் 38 வயதுடைய தினசரி கூலித்தொழிலாளி ஒருவர் மூச்சுத் திணரல் பிரச்சனையால் சஹரன்பூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை இல்லாததால் அரசு டூன் மருத்துவக் கல்லூரிக்கு (ஜி.டி.எம்.சி.) பரிந்துரைக்கப்பட்டது.
இருப்பினும், ஜி.டி.எம்.சி.யில் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை வசதி இல்லை என்று அவரை அனுமதிக்க மறுத்துவிட்டது.
பின்னர் குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சனிக்கிழமையன்று அவரது உடல்நிலை மோசமடைந்தபோது, அவர் ஜாலிகிரான்டில் உள்ள இமாலயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
பின், குடும்பத்தினர் அவரை டெஹ்ராடூனில் உள்ள ஸ்ரீ மகாந்த் இந்திரேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவமனையும் படுக்கை வசதி இல்லையேன அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை குடும்பத்தினர் சந்தித்து உதவி கேட்டனர். அவர் ஜி.டி.எம்.சி.யில் அனுமதிக்கப்படுவதற்கு உதவினார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் நோயாளி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. ராஜ்குமார் கூறுகையில், மாநிலத்தில் கரோனா நோயாளிகளை கையாளும் விதம் அம்பலமாகியுள்ளது. நோயாளியின் குடும்பத்திற்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் மருத்துவமனைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனைகளிடமிருந்து அறிக்கை கோரியுள்ளதாக டெஹ்ராடூன் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) அனூப் டிம்ரி தெரிவித்தார்.