உ.பி. கூட்டுப் பாலியல் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் மாநில அரசிற்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் மாநில அரசிற்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 20 வயதான பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதுகுறித்து வெளியில் செய்தி கசியாமல் இருக்க அப்பெண்ணின் நாக்கை அந்தக் கும்பல் வெட்டியுள்ளது.
ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கழுத்து முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் செவ்வாய்க்கிழமை பலியானார்.
இதையடுத்து காவல்துறையின் வற்புறுத்தலால் அப்பெண்ணின் சடலத்தை புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவசர அவசரமாக தகனம் செய்தனர்.
மேலும், உ.பி. காவல்துறை தங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல கட்சியினர் மற்றும் பிரபலங்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உ.பி. காவல்துறை தலைவர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு அறிக்கை சமர்பிக்க கோரி மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் வழங்கியுள்ளது.