நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மிகக் குறைந்த நாள்களில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மனோகர் அக்னானி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் கரோனா தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 21 நாள்களில் மட்டுமே 52,90,474 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இத்தனை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா 24 நாள்களும், பிரிட்டன் 45 நாள்களும் எடுத்துக் கொண்டன. இதன் மூலம், அதிக வேகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை ஒரே நாளில் 3,31,029 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், அவர்களின் உயிரிழப்பு கரோனா தடுப்பூசியால் இல்லை என தெரிவித்துள்ளார்.