ஆசியாவின் மிகப்பெரிய பண்ணை பகுதியான ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 4 லட்சம் கோழிகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தெரிவித்துள்ளது.
ஹரியாணா, பஞ்சாப் மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் பரவி வருகின்றது.
இந்நிலையில், ஹரியாணாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் 10 நாள்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகள் பலியாகியுள்ளன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பண்ணைகளில் இறந்த பறவைகளின் மாதிரிகள் சேகரித்து ஜலந்தரில் உள்ள மண்டல நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவிற்காக காத்திருகின்றோம்.
பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகளில் 77,87,450 பறவைகள் இருக்கின்றது. அதில் 4,09,970 பறவைகள் பலியாகியுள்ளன.
கோழிகளின் இறப்பு அதிகளவில் இருந்தாலும், கோழி அல்லது முட்டையை சாப்பிட்ட யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என்று கூறினார்.