நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நவம்பர் 26-ஆம் தேதி நிவர் புயல் கரையைக் கடந்தது. இதில் தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் சேதங்களைச் சந்தித்தன.
இதையடுத்து நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26.59 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது,
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.16.08 கோடி, தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணமாக ரூ. 10 ஆயிரமும், நெற்பயிர், நீர்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ. 20 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும், பல்லாண்டு கால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ. 25 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.