'நீட் தேர்வின் தகுதியை இடஒதுக்கீடு நீர்த்து போகச் செய்யும்’: மத்திய அரசு பதில்மனு
மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்து போகச் செய்யும் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்து போகச் செய்யும் என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்து துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. அமைச்சரவையின் முடிவை, துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.
கடந்த 2016-2017 ஆம் ஆண்டிலிருந்து அரசு பள்ளியில் படித்த 16 முதல் 22 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் தனியார் பள்ளியில் படித்த 243 பேர் முதல் 402 மாணவர்கள் வரை மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை புதுச்சேரியில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் கொண்டு வரப்படவுள்ள சட்டம் என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும். தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் தொடர்பாக தங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட வில்லை என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து முடிவு செய்ய 6 வார கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது .இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதார்ர் தரப்பில ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கை. அரசு பள்ளி மாணவர்களை கொச்சைப்படுத்தும் நடவடிக்கை என ஆட்சேபனை தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக 4 வாரத்துக்குள் முடிவெடுத்து உரிய பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.