உண்மையான விவசாயிகள் அனைவரும் தில்லியைவிட்டு வெளியேறி எல்லைகளுக்கு திரும்புமாறு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி தில்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் தில்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர்.
தில்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, முக்கிய பகுதிகளில் நுழையக்கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், தடுப்புகளை மீறி விவசாயிகள் தற்போது தில்லி செங்கோட்டை பகுதியை அடைந்துள்ளனர்.
இதையடுத்து பஞ்சாப் முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில்,
தில்லியில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கின்றது. வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளால் உருவாக்கப்பட்ட நல்லெண்ணங்களை, இந்த செயல் பாதிப்படைய செய்யும்.
உண்மையான விவசாயிகள் தில்லியைவிட்டு வெளியேறி எல்லைகளுக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.