நாமக்கல்: உயிருக்குப் போராடும் நிலையில் ஜனநாயக கடமையாற்றிய 75 வயது மூதாட்டி!
நாமக்கல் நகராட்சியில் 75 வயது மூதாட்டி ஒருவர் உயிருக்குப் போராடும் நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில் 75 வயது மூதாட்டி ஒருவர் உயிருக்குப் போராடும் நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள 39 வார்டுகளில், 22, 25 ஆவது வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 37 வார்டுகளுக்கான தேர்தல், 107 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நகராட்சி 18-ஆவது வார்டுக்கு உட்பட்ட குழந்தான் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி என்பவரது மனைவி லட்சுமி(75). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் ஆட்டோ ராஜா, சுமதி, காயத்ரி, பிரபாகரன் ஆகியோரது உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏ.எஸ்.பேட்டையில் உள்ள சில்ரன்ஸ் பார்க் பள்ளி வாக்குச்சாவடிக்கு பிற்பகல் 2.30 மணி அளவில் வந்தார்.
Advertisement
அவர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரை வாக்குச் சாவடிக்குள் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லாததால், அங்கிருந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஆம்புலன்சில் வந்த மூதாட்டி லட்சுமியின் இடது கை பெருவிரலில் ரேகை பதிவிட்டு வாக்குப்பதிவு செய்ய லட்சுமியின் மகள் தேவியை அனுமதித்தார். மூதாட்டியின் இடது கை ஆள்காட்டி விரலில் வாக்கு செலுத்தியதற்கான மை மட்டும் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த தகவல் அறிந்து திமுக, பாஜக வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸார் வேட்பாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் வாக்குச்சாவடியினுள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.