நாகை நகர்மன்றத் தலைவராக இரா.மாரிமுத்து தேர்வு
நாகை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த இரா. மாரிமுத்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாகப்பட்டினம்: நாகை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த இரா. மாரிமுத்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாகை நகர்மன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம், நாகை நகர்மன்றக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இந்நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 24 வார்டுகளில் வென்று பெரும்பான்மை பெற்றுள்ள திமுக சார்பில் 30-வது வார்டு உறுப்பினர் இரா. மாரிமுத்து. தனது வேட்புனுவை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவியிடம் தாக்கல் செய்தார்.
Advertisement
இப்பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு அளிக்கவில்லை. இதனால், இரா.மாரிமுத்து நாகை நகர்மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர், நாகை நகர்மன்றத் தலைவராக பதவியேற்றார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என். கௌதமன், தாட்கோ தலைவர் உ. மதிவாணன் ஆகியோர் நகரமன்றத் தலைவர் இரா.மாரிமுத்துவுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், சக நகர்மன்ற உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரா.மாரிமுத்து, 2006-ம் ஆண்டில் நாகை நகர்மன்ற துணைத் தலைவராக பதவி வகித்தவர். இவர் திமுகவின் நாகை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஆவார்.