தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெற்கு தில்லியில் உள்ள சாகேத் பகுதியில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பெண் மீது வழக்கறிஞர் போல உடையணிந்து வந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதனைக் கண்டதும் அந்த பெண் அலறியபடி ஓடினார்.
இருப்பினும் அந்த நபர் விடவில்லை. துரத்திச் சென்று 4 முறை அந்த பெண்ணை நோக்கி சுட்டார். இதில் பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவரும் காயமுற்றார்.
உடனடியாக காயமடைந்த 2 பேரையும் மீட்டு காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். குடும்பப் பிரச்னை காரணமாக பெண்ணின் கணவரே சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தில்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனடையே தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.