ஜம்மு-காஷ்மீர்: பயணிகளை ஆன்மிக சுற்றுலாவுக்காக ஏற்றி வந்த பேருந்து, ஜம்மு காஷ்மீர் அக்னூர் பகுதிக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸை சேர்ந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, ஹரியாணாவின் குருக்ஷேத்ராவில் இருந்து ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவ்கோரி ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தது.
ஜம்மு - பூஞ்ச் நெடுஞ்சாலையில் காளி தார் மந்திர் அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து விழுந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அக்னூரில் உள்ள மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ”ஜம்முவுக்கு அருகில் அக்னூரில் நடந்த பேருந்து விபத்து குறித்து அறிந்தவுடன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை அடைந்தேன். துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு மாவட்ட ஆட்சியர் ஹர்விந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸை சேர்ந்த ஆன்மிக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்முவில் உள்ள தண்டா, அக்னூர் அருகே விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.