ஜம்மு - காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்! - சுகாதார அமைச்சகம் தகவல்!
ஜம்மு - காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறித்து...
ஜம்மு - காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டில் 93,765 நாய்க்கடி சம்பவங்களும், 2025 ஆம் ஆண்டில் 1,12,695 நாய்க்கடி சம்பவங்களும் என 2 ஆண்டுகளில் 2,06,460 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில், அதிகப்படியாக ஜம்மு, கதூவா, உதம்பூர், ரஜௌரி, சாம்பா, டோடா, ரியாசி, பூஞ்ச், ராம்பன், கிஷ்த்வார் ஆகிய 10 மாவட்டங்களில் மொத்தம் 1,26,844 நாய்க்கடி சம்பவங்கள் (2024- 54,863, 2025 - 71,981) பதிவாகியுள்ளன.
இதனால், நாய்க்கடி சம்பவங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஜம்மு - காஷ்மீர் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறிவியல் கணக்கெடுப்பின் மூலம் ஸ்ரீநகர் மாநகராட்சியில் மட்டும் 64,416 நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.