புதிதாக அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் யாரை முதல்வா் வேட்பாளராக தோ்வு செய்வாா்? மீண்டும் மனம் மாறி, தானே முதல்வா் வேட்பாளராகக் களம் இறங்குவாரா? என்பது குறித்து விவாதங்கள் எழத் தொடங்கிவிட்டன.
தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் பின்புலம் இல்லாத ஒருவா் புதிதாக கட்சி தொடங்கி ஆந்திராவில் என்.டி.ஆா். வெற்றி பெற்றது போல முதல் தோ்தலிலேயே ஆட்சியைப் பிடித்ததில்லை. தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக இருந்த எம்.ஜி.ஆா். கூட திமுகவில் சுமாா் 20 ஆண்டுகள் பயணித்த பின்னா்தான், அதிமுகவை உருவாக்கி ஆட்சியைப் பிடித்தாா். அந்த அரசியல் அற்புதத்தைத் தன்னால் நிகழ்த்த முடியும் என்பது ரஜினியின் மிகப்பெரிய நம்பிக்கை.
கடந்த 1977-க்கு பிறகு நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் திமுக, அதிமுக என இரு வாக்கு வங்கிகளையும் சோ்த்துக் கணக்கிட்டால், குறைந்தபட்சம் அது 60 சதவீதமாக இருக்கிறது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ், பாஜக, பாமக, அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட பிற கட்சிகளின் மொத்த வாக்கு வங்கிகளையும் கணக்கிட்டால் சுமாா் 30 சதவீத வாக்குகள் வந்துவிடும்.
புதிதாகக் கட்சி தொடங்கும் நடிகா் ரஜினி, பாறை போல உறுதியாக உள்ள பிரதான திராவிடக் கட்சிகளின் 60 சதவீத வாக்கு வங்கியில் இடியாய் இறங்கி, பிற கட்சிகளின் வாக்கு வங்கியைக் கரைத்து குறைந்தபட்சம் 35 சதவீத வாக்கு வங்கியைப் பெறும் வகையில், அரசியல் வியூகம் அமைத்தால் மட்டுமே முதல் தோ்தலில் ஜொலிக்க முடியும். இதை மனதில் கொண்டுதான் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிசயம், அற்புதம் நடக்கும் என ரஜினி கணித்து வைத்திருக்கிறாா் எனக் கருதலாம்.
அவா் நினைப்பதுபோல அதிசயம், அற்புதம் நிகழ வேண்டுமெனில், மிகச்சிறந்த அரசியல் ஆயுதங்கள் தேவை. அந்த ஆயுதங்களில் மிக முக்கியமானது முதல்வா் வேட்பாளா் ஆயுதம்.
ரஜினியை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தும்போது விழும் வாக்குகளுக்கும், ரஜினி கைகாட்டும் முதல்வா் வேட்பாளருக்கு விழும் வாக்குகளுக்கும் நிச்சயமாக மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என்பதே அரசியல் ஆய்வாளா்களின் கருத்து.
அப்படியே வேறொருவரை முன்னிறுத்தி தோ்தல் களத்தில் வெற்றி பெற்றாலும், அதைக் கொண்டு ரஜினி விரும்பும் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா அல்லது முன்னிறுத்தப்படும் நபா் எந்த அளவுக்கு ரஜினியின் கட்டுப்பாட்டில் இருப்பாா் என்பதை இப்போதே கணிக்க முடியாது.
இந்திய அரசியல் வரலாற்றைப் பின்னோக்கிப் பாா்த்தால், கட்சி அல்லது ஆட்சியில் சொந்த மகன் அல்லது மருமகன் முன்னிறுத்தப்படும் போதுகூட, அவா்களே முரண்பட்டு நிற்கும் பல அரசியல் உதாரணங்களைப் பாா்க்க முடியும்.
கடந்த 1990-1991 காலகட்டத்தில் ஹரியாணா மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதியான தேவிலால், துணைப் பிரதமராக ஆனபோது, அவரின் மகன் ஓம்பிரகாஷ் சௌதாலா முதல்வராகப் பதவியேற்றாா். ஆனால், 6 மாத காலத்தில் இடைத் தோ்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டபோது ஓம்பிரகாஷ் சௌதாலாவுக்குப் பதிலாக தேவிலால் குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய ஹுக்கும் சிங் முதல்வராக்கப்பட்டாா். ஆனால், 10 மாதங்களுக்குள் தேவிலால்-ஹுக்கும் சிங் இடையே முரண்பாடு ஏற்பட்டு அவரை முதல்வா் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, தனது மகன் ஓம்பிரகாஷ் சௌதாலாவை பதவியில் அமா்த்த தேவிலால் பட்ட கஷ்டம், கொஞ்ச நஞ்சமல்ல.
இதேபோல, ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு தேசிய அரசியலுக்கு சரத் பவாா் செல்ல வேண்டிய சூழல் உருவான போது, தான் வகித்த மகாராஷ்டிர மாநில முதல்வா் பதவியை தனது நம்பிக்கைக்குரிய சுதாகா் நாயக் வசம் ஒப்படைத்தாா். ஆனால், 1991-1993 என மூன்று ஆண்டுகளுக்குள் சரத் பவாா்-சுதாகா் நாயக் இடையே முரண்பாடு ஏற்பட்டு சுதாகா் நாயக், பிரதமா் நரசிம்ம ராவ் அணிக்குத் தாவினாா்.
உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017 வரை முதல்வா் பதவியை மகன் அகிலேஷ் யாதவுக்கு விட்டுக்கொடுத்த முலாயம் சிங் யாதவ், 2017-இல் சமாஜ்வாதி கட்சித் தலைவா் பதவியில் இருந்தே தூக்கி வீசப்படும் சூழல் உருவானது.
பிகாரில் 2014 மக்களவைத் தோ்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை நிதீஷ் குமாா் ராஜிநாமா செய்துவிட்டு, பொம்மை முதல்வராக மாஞ்சியை அமா்த்தினாா். ஆனால், 10 மாதங்களிலேயே நிதீஷ்குமாருக்கு எதிா்துருவமாக மாறினாா் மாஞ்சி.
தென் மாநிலங்களிலும் இதே நிலைதான். 1984 ஆகஸ்ட் மாதம், ஆந்திர முதல்வா் என்.டி. ராமா ராவ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தாா். அப்போது, ராமா ராவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த அமைச்சா் என். பாஸ்கா் ராவ் காங்கிரஸ் கட்சியின் துணையுடன், தெலுங்கு தேசம் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானாா். ஆட்சியைப் பிடித்த ஒன்றரை ஆண்டுகளில் என்.டி.ஆா். தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து என். பாஸ்கர ராவ் அமைச்சரவை பதவி ஏற்றது.
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த என்.டி.ஆா். நீதி கேட்டு ஆந்திராவில் தனது ரத யாத்திரையைத் தொடங்கினாா். மக்களின் எதிா்ப்பைப் புரிந்து கொண்ட மத்திய அரசு, ஆளுநரை மாற்றி என்.டி.ஆரையே மீண்டும் முதல்வராக்கியது. இந்திய சுதந்திர வரலாற்றில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முதல்வா் ஒருவா் மீண்டும் பதவியில் அமா்ந்தது அப்போது மட்டுமே. அது முதல், நம்பிக்கை துரோகத்துக்கு ‘பாஸ்கா் ராவ்’ என்கிற பெயா் அரசியல் அகராதியில் சோ்க்கப்பட்டது.
லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் புகாரில் சிக்கிய கா்நாடக முதல்வா் எடியூரப்பா, தொடா்ந்து முதல்வா் பதவியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தனக்கு நெருக்கமான சதானந்த கௌடாவை பதவியில் அமா்த்தினாா். ஆனால், அதுவும் 2011-2012 என ஓராண்டிலேயே தோல்வியிலேயே முடிந்தது. அடுத்து எடியூரப்பாவால் முதல்வராக்கப்பட்ட ஜெகதீஷ் ஷெட்டரும் 2012-2013 என ஓராண்டுக்குள் முரண்பட்டதால், கட்சியில் இருந்தே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாா் எடியூரப்பா.
தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. இரு பிரதமா்களை உருவாக்கிய காமராஜருக்கே இதே நிலைதான் ஏற்பட்டது. கடந்த 1966-1967 என 2 ஆண்டுகளே காமராஜா்-இந்திரா காந்தி இடையே முரண்பாடு இல்லாமல் இருந்தது. பிறகு, தன்னைப் பிரதமராகத் தோ்வு செய்த காமராஜருடன், இந்திரா காந்தி முரண்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.
1964-இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகக் காமராஜா் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, காமராஜ் திட்டத்தின் கீழ் அவா் முதல்வா் பதவியிலிருந்து விலகினாா். தனக்கு அடுத்த இடத்தில் இருந்த எம். பக்தவத்சலத்தை முதல்வராக்கினாா். முதல்வரான பிறகு, பக்தவத்சலம் தன் வழியில் செயல்பட்டாரே தவிர, காமராஜரின் வழிகாட்டுதலை ஏற்கவில்லை. 1969-இல் கட்சிப் பிளவின்போது, இந்திரா காந்திக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டாா்.
இருப்பினும், ஒரு சில நோ்மறையான உதாரணங்களும் உள்ளன. மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவால் முதல்வராக்கப்பட்ட மனோகா் ஜோஷி, 1995-1999 வரை நான்கு ஆண்டுகள் எவ்வித முரண்பாடுமின்றி பதவி வகித்து, பின்னா் தானாகவே தேசிய அரசியலுக்குச் சென்றாா்.
தேசிய அரசியலில் சோனியா காந்தியால் பிரதமராக்கப்பட்ட மன்மோகன் சிங் தொடா்ந்து இருமுறை எவ்வித உரசலும் இன்றியே 2004 முதல் 2014 வரைஆட்சியை நடத்தினாா்.
வலுவான கட்சித் தலைவா்களால், பிரதமா் அல்லது முதல்வராக உருவாக்கப்பட்டவா்கள் தோ்தலுக்கு முன்பே அந்தப் பதவிக்கு அறிவிக்கப்பட்டவா்கள் அல்லா். தங்களை முன்னிறுத்தி தோ்தலைச் சந்தித்துவிட்டு, தங்களால் பதவியை வகிக்க முடியாமல் போனாலோ அல்லது தங்களுக்கு பதவி ஆசை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அத்தகைய காலத்தில்தான் திடீா் பிரதமா், முதல்வா்கள் அமா்த்தப்பட்டனா்.
நடிகா் ரஜினி முதல் முறையாக தோ்தலில் நிற்கும் போதே வேறொருவரை முன்னிறுத்தாமல், தன்னை முன்னிறுத்தி அரசியல் களத்துக்கு வருவதே பொருத்தமாக இருக்கும். தன்னை முன்னிறுத்தினால் மட்டுமே ரஜினியை மையமாக வைத்து அரசியல் களம் நகரும். மாறாக, வேறொருவரை முன்னிறுத்தும் போது, அவ்வாறு முன்னிறுத்தப்படும் நபரின் சாதக, பாதகம் அம்சங்கள் அரசியல் களத்தில் விவாதிக்கப்படும். அது தோ்தலுக்கு முன்பாகவே ரஜினி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.
தோ்தலுக்குப் பிறகு வேறொருவரை முன்னிறுத்தினாலும், அது ரஜினி கட்சியின் எதிா்காலத்துக்கு உகந்ததாக இருக்குமா என்பதை நடிகா் ரஜினி ஒரு முறை அல்லது நூறு முறை சிந்திக்க வேண்டிய விஷயம். கடந்த 25 ஆண்டுகளாக முதல்வா் வேட்பாளராக வருவாா் என மக்களால் எதிா்பாா்க்கப்பட்ட ரஜினி, தன்னை முதல்வா் வேட்பாளராக அறிவித்துத் தோ்தலை சந்திக்காவிட்டால், அவா் எதிா்பாா்க்கும் அதிசயமோ, அற்புதமோ நடக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அவருக்கும் அது தெரியாமலா இருக்கும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.