கேரள-ம், தமிழ் நாடு... பெயரில் என்ன இருக்கிறது?
மாநிலங்களின் பெயர் மாற்றங்களும், நடைமுறைகள் பற்றியும்...
டி.கே. வினீத்
1956 ஆம் ஆண்டு கேரளா எனப் பெயர் மாற்றப்பட்ட திருவாங்கூர் கொச்சின், தற்போது மலையாள மொழி உச்சரிப்பான கேரளம் என மீண்டும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பு சாசனத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளிலும், கேரளா மாநிலத்தின் பெயரை, 'கேரளம்' என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அந்த மாநில சட்டப்பேரவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 118-இன் கீழ், கடந்த 9.8.2023 அன்று மாநில முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்தார்.
இந்தத் தீர்மானத்தை ஒரு மனதாக மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது கேரள அரசு. இதை மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் கடந்த 24.6.2024 அன்று கேரள அரசு அனுப்பியது. 24.2.2026 அன்று புது தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கேரளாவின் பெயரை மலையாள மொழிப்படி, 'கேரளம்' என மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வமாக கேரளம் என மாறும்.
நோக்கம் என்ன?
கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்த பெயர் மாற்றம் குறித்து மாநில அரசு அளித்திருக்கும் விளக்கத்தில், கேரளம் என்ற பெயர் வரலாற்று அடையாளத்துடன் ஒத்துப் போகிறது. மலையாளத்தில் கேரளம் என அழைக்கப்படுவதால், தவறான உச்சரிப்பு நீங்கியுள்ளது. மலையாள மொழி பேசும் மக்களுக்காக, தனி மாநிலமாக நவம்பர் 1, 1956 அன்று கேரளா உருவாக்கப்பட்டது. மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயரை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதால் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
கேரள அரசின் தீர்மானம்:
"மலையாள மொழியில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளம்'. மொழியின் அடிப்படையில் நவம்பர் 1, 1956 அன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. கேரள பிறவி நாளும் நவம்பர் 1 ஆம் தேதிதான் கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே, மலையாள மொழி பேசும் மக்களுக்காக ஐக்கிய கேரளத்தை உருவாக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளா' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 'கேரளம்' என்ற பெயரை மாற்றுவதற்கு அரசியலமைப்பின் பிரிவு 3 இன் படி அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்த சட்டப்பேரவை ஒருமனதாக மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்ட நடைமுறை என்ன?
மாநில அரசின் அனுமதியுடன் நகரங்கள், மாவட்டங்களின் பெயர்களை மாற்றுவது போலல்ல இது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ பெயர்களையும் அவற்றின் எல்லை அதிகார வரம்புகளையும் பட்டியலிடும் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் திருத்தம் செய்வதம் மூலம் மட்டுமே மாநிலங்களின் பெயரை மாற்ற முடியும். இந்த செயல்முறை அரசியலமைப்பின் பிரிவு 3 ஐ உள்ளடக்கியது. நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.
முதலில், மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். பின்னர், உள்துறை அமைச்சகம் மாநிலத்தின் முன்மொழிவை ஆராயும். ரயில்வே துறை, இந்திய கணக்கெடுப்பு துறை, தபால் துறை, புலனாய்வுப் பணியகம் உள்ளிட்டவையிடம் கருத்துகளைக் கேட்டு, சட்டத்துறை தரப்பில் பெயர் திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
எவ்வளவு நிதித் தேவை?
ஒரு மாநிலத்தின் பெயர் மாற்றமானது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதுடன் நின்றுவிடாது. இதனை முறையாக அமல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவர கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
புதிய பெயரைப் பிரதிபலிக்கும் வகையில் அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகள் மாற்றம், அரசு வலைதளங்கள், புதிய லெட்டர் பேட் போன்ற அடிப்படையான பல விஷயங்களில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் பெயர் மாற்றப்படாது.
முழு நடைமுறைக்கும் எவ்வளவு செலவாகும் என்பதற்கான அதிகாப்பூர்வ மதிப்பீடுகள் எதுவும் இல்லை. உதாரணமாக ஒடிஸா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பெயர் மாற்றிய பிறகு நடைமுறைக்கு கொண்டுவர ரூ. 400 முதல் ரூ. 1,000 கோடி வரை செலவிட்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் அதிகளவில் சுற்றுலாத் தலங்கள் இருப்பதால், அந்த இடங்களிலெல்லாம் பெயர் மாற்றப்படும். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகளவில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆயிரம் கோடி ரூபாய்கூட ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெயர் மாற்றப்பட்ட மாநிலங்கள்
ஐக்கிய மாகாணங்கள் - உத்தரப் பிரதேசம் (1950)
கிழக்கு பஞ்சாப் - பஞ்சாப் (1950)
ஹைதராபாத் - ஆந்திர பிரதேசம் (1956)
திருவாங்கூர் கொச்சின் - கேரளா (1956) - கேரளம் (2026)
மத்திய பாரத் - மத்திய பிரதேசம் (1959)
மதராஸ் - தமிழ்நாடு (1969)
நார்த் ஈஸ்ட் ஃபிரான்டியர் ஏஜென்சி - அருணாசல பிரதேசம் (1972)
மைசூர் - கர்நாடகம் (1973)
லக்காடிவ், மினிகாய் மற்றும் அமிண்டிவி தீவுகள் - லட்சத்தீவுகள் (1973)
உத்தராஞ்சல் - உத்தரகண்ட் (2007)
ஒரிசா - ஒடிசா (2011)
மேற்கு வங்க பெயர் மாறாதது ஏன்?
மேற்கு வங்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, மாநிலத்தின் பெயரை வங்காளம் என மாற்ற பலமுறை முயற்சித்துள்ளார்.
ஜூலை 2018 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தின் பெயரை வங்காளம் என மாற்றக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்.
அந்த தீர்மானத்தில், வங்கதேசம் தனி நாடாக உருவாக்கப்பட்ட பிறகு, கிழக்கு வங்கம் என்பது கிடையாது. ஆகையால், வங்காளம் என மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றுவது அர்த்தமுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அண்டை நாடான வங்கதேசத்தின் பெயருடன் குழப்பமடையக் கூடும் எனக் கூறி பெயர் மாற்றத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தது.
இதையடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவையின் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் எஸ். ரவிவர்மா