வேதா நினைவு இல்லம்: திறந்து வைத்தார் முதல்வர்
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (ஜன.28) திறந்து வைத்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் வேதா நினைவு இல்லத்தை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று (ஜன. 27) திறந்து வைத்த நிலையில், இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
வேதா இல்லத்தின் பெயர் பலகையையும், நினைவு இல்ல கல்வெட்டினையும் முதல்வர் பழனிசாமி மக்கள் பார்வைக்காக திறந்து வைத்து, ரிப்பன் வெட்டி வேதா நினைவு இல்லத்தினுள் சென்றார்.
இல்லத்தினுள் சென்ற முதல்வர் பழனிசாமி வரவேற்பரையில் இருந்த குத்து விளக்கை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி நினைவு இல்லத்தை பார்வையிட்டனர்.
வேதா நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.