கோவில்பட்டி அருகே இளைஞர் வெட்டிக்கொலை
கோவில்பட்டி அருகே கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகே கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு சாலையில் உள்ள தனியார் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவனம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு இறந்த நிலையில் இருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அவர் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி 4 ஆவது தெருவைச் சேர்ந்த பொய்யாழி மகன் மதன்குமார் (20). பெயிண்டர் தொழில் செய்து வந்த இவர் வியாழக்கிழமை மாலை வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.