வளரும் நிலையில் மரங்கள் வெட்டப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
அவிநாசி-திருப்பூர் சாலையில் வளரும் நிலையில் மரங்கள் வெட்டுப்பட்டதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அவிநாசி: அவிநாசி-திருப்பூர் சாலையில் வளரும் நிலையில் மரங்கள் வெட்டுப்பட்டதால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அவிநாசி-திருப்பூர் நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் ஏராளமான மரங்கள் நடப்பட்டு, நாள்தோறும் நெடுஞ்சாலை தனியார் ஒப்பந்ததார்கள் மூலம், பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின்வாரித்தியத்தினர் செவ்வாய்க்கிழமை பாராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர். இப்போது அவிநாசி திருப்பூர் சாலையில் சாலையோரம் வளர்ந்து வரும் நிலையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அடிப்பாகத்துடன் வெட்டப்பட்ட மரம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: நெடுஞ்சாலையோரம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மரங்கள், தற்போது நன்கு வளர்ந்து வரும் நிலையில் மின்வாரியத்தினர் மின் கம்பிகள் மீது படும் கிளைகளை மட்டும் வெட்டாமல், அடிப்பாகத்தையும் சேர்ந்து வெட்டியுள்ளது வேதனையளிக்கிறது என்றனர்.
இது குறித்து மின்வாரியத்தினரிடம் கேட்ட போது, அனைத்து மரங்களையும் கிளைகளை மட்டுமே வெட்டியுள்ளோம். கிளைகள் இல்லாத நேராக வளர்ந்து மின்கம்பி மீது உரசிய ஒரு மரம் மட்டுமே சிறிது கீழே பாகத்தில் வெட்டப்பட்டுள்ளது. பாரமரிப்பு பணியின் போது அவசியம் கிளைகளை மட்டுமே வெட்ட வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.