சிதம்பரத்தில் பொருள்கள் வாங்க அலைமோதிய கூட்டம்: மாலுக்கு சீல் வைப்பு
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலிருந்து முழு தளர்வு அளிக்கப்பட்டதால், நகர வீதிகளில் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனர்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலிருந்து முழு தளர்வு அளிக்கப்பட்டதால், நகர வீதிகளில் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனர். மேலும் ஊரடங்கு ஊத்தரவை திறந்து மக்கள் கூட்டத்துடன் விற்பனை மாலுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் மே 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என அரசு அறிவித்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மிகப்பெரிய மால்களை தவிர அனைத்து கடைகளும் திறக்கலாம் என தமிழகஅரசு அறிவித்தது.
சிதம்பரம் தெற்குவீதி சீல் வைக்கப்பட்டு மால்
இதனையடுத்து சிதம்பரம் நகரில் உள்ள நான்கு வீதிகளிலும் உள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக மேலரத வீதியில் காய்கறி அங்காடி உள்ளிட்ட கடைகளுக்கு மக்கள் பொருள்கள் வாங்க வந்ததால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அரசு ஊரடங்கு உத்தரவை மீறி சிதம்பரம் தெற்குரத வீதியில் மால் ஒன்று திறக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளே புகுந்தனர். கடை ஷட்டரை மூடி வியாபாரம் செய்வதாக உதவி ஆட்சியர் லி.மதுபாலனகுக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி அலுவலர்கள் அங்கு சென்று மக்களை வெளியேற்றி கடைக்கு சீல் வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததனர்.