அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் பாளையம்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தபின்,விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள ஒருதனியார் பள்ளி வளாகத்திலும்,மேலும் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, முகாம் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர், விருதுநகர் மாவட்டத்தில் தற்போதுவரை சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும்,மேலும் தற்போது மாவட்டத்தில் தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்று இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்டைப்பதாக ஆதாரத்துடன் நிரூபணமானால், அம்மருத்துவமனையின் உரிமை ரத்து செய்யப்படுமெனவும், தற்போதுவரை மாவட்டத்தில் எவருக்கும் கருப்புப்பூஞ்சை பாதிப்பு உள்ளதாகத் தகவலில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முன்பைவிட கடந்த சில நாள்களாக அனைத்துத் தரப்புப் பொதுமக்களும் உரிய விழிப்புணர்வு பெற்று அதிக எண்ணிக்கையிலானோர் இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உடன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம்,முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜ், திமுக நகரச்செயலாளர் ஏ.கே.மணி,மற்றும் நகர,ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலரும்,சுகாதாரத்துறை ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டனர்.