திருத்தணி அருகே லாரி - கார் மோதி 5 பேர் பலி, 2 பேர் காயம்
திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரி கிராமம் அருகே லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருத்தணி: திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரி கிராமம் அருகே லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த 2 பேர் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரி கிராமம் அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்துக்கொண்டிருந்த லாரியும், எதிரே வந்து கொண்டிருந்த காரும் நேருக்குநேர் மோதி கோர விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 2 பேரும் திருவள்ளூர் அரசு பொது மருத்துனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் மற்றும் கனகம்மாசத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்க்கு வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடல்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் பலியானவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த கோர விபத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் சைதன்யா(21),விஷ்ணு(21).
பலியானவர்கள்:
21 வயதுடைய சேர்த்தன், யுகேஷ், நித்திஷ், நித்திஷ் வர்மா, ராம்கோமன் அனைவரும் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள். அனைவருமே ஆந்திரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.