வணிகவரித் துறையில் வரி பகுத்தாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த இரண்டு அலுவலர்களுக்கு தலா ரூ.1,00,000 ஊக்கத்தொகைக்கான காசோலையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் புதன்கிழமை (ஆக.14) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் போது வணிகவரித்துறை வரி பகுத்தாய்வுப் பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த ராம்குமார், உதவி ஆணையர் மற்றும் முஹம்மது இர்ஃபான், மாநில வரி அலுவலர், ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,00,000-க்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி வளாகத்தில் உள்ள வணிகவரிப் பணியாளர் பயிற்சி நிலையத்தில், துறைசார்ந்த பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வணிகவரி உதவி ஆணையர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த ஆறு உதவி ஆணையர்களை அமைச்சர் சந்தித்து பயிற்சியாளர்களிடம் பயிற்சி விவரங்களை கேட்டறிந்து, நல்ல முறையில் பயிற்சி பெற்று, சிறப்பாக பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும் அனைத்து இணை ஆணையர்களும் தங்கள் கோட்டங்களை சார்ந்த பகுதிகளில் அடிக்கடி ஆய்வு செய்து, போலி பில் தயாரித்து வணிகம் செய்யும் நிறுவனங்களை கண்டறிதல், ரூ.40 லட்சத்திற்கு மேல் தொழில் செய்வோர் விவரங்களை கண்டறிந்து ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருதல், தொடர்ந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தல், உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.