கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்!
கர்நாடக மாநிலத்தில் சிவன் கோயிலில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்ததைப் பற்றி..
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஹூப்பள்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலின் அறையில் நேற்று இரவு ஐயப்ப பக்தர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.
Advertisement
இதில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு கர்நாடக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சைப் பெற்று வரும் அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மாநில காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இரவு கோயிலில் தங்கிய ஐயப்ப பக்தர்கள் 9 பேரும் உணவு சமைத்து விட்டு எரிவாயு சிலிண்டரை சரியாக அணைக்காதே இந்த விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐயப்ப பக்தர்களான அவர்கள் அனைவரும் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு கோயிலில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.