சென்னை: வாகன ஓட்டியை உதைத்த காவலர்கள் பணியிடை நீக்கம்
சென்னையில் இருசக்கர வாகன ஓட்டியை காலால் உதைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருசக்கர வாகன ஓட்டியை காலால் உதைத்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மெட்டுக்குப்பம் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி இரவு கோயம்பேடு போக்குவரத்துல் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஹேமநாத்(வயது 27) என்பவரை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் சோதனையில் ஹேமநாத் குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததும், அவரிடம் ஓட்டுநர் உரிமை இல்லை என்றும் கூறி, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஹேமநாத், அங்கு பணியில் இருந்த கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல், போக்குவரத்து காவலர்கள் தினேஷ், அருள், சூரிய நாராயணன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது போக்குவரத்துக் காவலர் தினேஷ் ஹேம்நாத்தை அடித்து கீழே தள்ளி தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்து உள்ளார். மேலும் அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஹேமநாத்தின் பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்த ஹேமநாத் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னார் சம்பவம் குறித்து போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் தேவராணி விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் இருசக்கர வாகன ஓட்டுநரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கோயம்பேடு போக்குவரத்து உதவியாளர் சக்திவேல், போக்குவரத்து காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே இரு சக்கர வாகன ஓட்டியை பூட்ஸ்கால் எட்டி உதைக்கும் விடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.