முகப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாத தளபதி சுட்டுக் கொலை!

பயங்கரவாதத் தளபதி இர்பான் உல்லா என்ற அட்னானை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை.

Updated On : 4 ஜூலை, 2024 at 4:22 AM
கோப்புப்படம்
பகிர்:

கைபர் பக்துன்க்வா: பாகிஸ்தானில் சட்டம்- ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணம் பஜூர் மாவட்டத்தில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையின்போது பயங்கரவாதத் தளபதி இர்பான் உல்லா என்ற அட்னானை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் ஊடக மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவு புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணம் பஜூர் மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவன் பதுங்கி இருப்பதாக புதன்கிழமை(ஜூன் 3) உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பஜூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிக்கும் பாதுகாப்பு வீரர்களும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாத தளபதி இர்பான் உல்லா சுட்டுக் கொல்லப்பட்டான்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி இர்பான் உல்லா, பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பல பயங்கரவாதத் தாக்குதல்களிலும், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாதுகாப்பற்ற மக்களைக் குறிவைத்து படுகொலை செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தான் என்பது தெரியவந்துள்ளது.

பயங்கரவாத தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ள உள்ளூர்மக்கள், நாட்டிலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தலை அகற்ற பாதுகாப்புப் படையினருக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர்," என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை, கைபர் பக்துன்க்வாவில் ஒன்பது பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.