மேட்டூர் அணை: நீர்வரத்து 53 ஆயிரம் கன அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாள்களில் 17.48 அடி உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 53,098 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாள்களில் 17.48 அடி உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 53,098 கன அடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடகம், கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை, நுகு அணைகள் நிரம்பிய நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்த உபரிநீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி அணையின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வறண்டு கிடந்த மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 53,098 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 16-ஆம் தேதி காலை 43.83அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 61.31 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.48 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 25.67 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று 5வது நாளாக அடிபாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் ஐந்தாவது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காவிரி கரையில் பயிரிட்டு இருந்த பயிர்களை கிராம மக்கள் தங்களின் கால்நடைகளுக்கு தீவனத்திற்காக அறுவடை செய்து செல்கின்றனர்.