தமிழகத்தில் ஆக. 21-ல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஜெயிக்கா கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் செய்தியாளர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்குகிறது
அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மருத்துவத் தேர்வுக் குழு மூலமாக முதல்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது. அதற்கான முதல்கட்ட கலந்தாவிற்கான தரவரிசைப் பட்டியல் 19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது
முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கிய பின்னர், அரசுப் பள்ளி மாணவர்கள 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு,மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு ஆகியவற்றிகான கலந்தாய்வு ஆக. 22 ஆம் தேதி மற்றும் ஆக. 23 ஆம் தேதி நடைபெறும்.
மேலும், இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்க தமிழகத்திலிருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், மத்திய அரசின் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவை தவிர, 21 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 11,500 மருத்துவ இடங்கள் உள்ளன.
நிகழாண்டு நீட் தோ்வில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போனது. உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னா் ஆக. 14 முதல் கலந்தாய்வு நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்தது.
மாநிலத்தில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது. அந்த வகையில், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 31) காலை 10 மணிக்கு தொடங்கியது.
இதில், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்திருந்தது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஜூலை 31 முதல் ஆக. 8 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.