கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்): மக்களவைத் தோ்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்களித்த பின்னர் மோடி அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரின் கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தின் திருவிழாவில் இன்று, உத்தரப்பிரதேசத்தின் 13 தொகுதிகள் உட்பட 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. "வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வாக்களித்து வருகின்றனர். வாக்களிக்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
நாடு முழுவதும் பாஜகவுக்கு கிடைத்து வரும் ஆதரவைப் பார்க்கும்போது, ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வரும்போது, இளைஞர்களுக்காக உழைத்தவர்(மோடி) வெற்றி பெறுவார். ஜூன் 4 ஆம் தேதி மீண்டும் மோடி அரசு அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
பிரதமா் நரேந்திரமோடி கன்னியாகுமரியில் மேற்கொண்டுவரும் 45 மணி நேர தியானம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில், "மக்களவைத் தோ்தலையொட்டி பிரதமர் மோடி தனது இரண்டரை மாத சூறாவளி தேர்தல் பிரசார பயணத்தில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முழு வாழ்க்கையையும் இந்தியாவுக்காக அர்ப்பணித்துள்ள மோடி, 10 ஆண்டுகளாக நாட்டின் நலனை முதன்மையாகக் கருதி, நாட்டுக்காக பணியாற்றி, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை முதன்மை இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
மேலும் பிரதமர் மோடியின் இந்த ஆன்மீக வழிபாடு தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஊழல் மற்றும் தவறான நடத்தையில் ஈடுபடுபவர்களால் இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியாது, இதை புரிந்துகொள்ள, ஒருவருக்கு நாடு மற்றும் நாட்டின் நித்திய விழுமியங்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் தியானமும் பக்தியும் தேச வழிபாட்டின் ஒரு பகுதியாகும், அதன் பலன்களை நாடும் பெறும்" என்று யோகி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.