விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு! - ஏர் இந்தியா விளக்கம்
விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜூன் 9 ஆம் தேதி பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI 175 இல் பயணம் செய்த மதுரெஸ் பால், தனது உணவில் பிளேடு இருந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
விமானத்தில் உணவருந்தும் போது, வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருந்ததை மதுரெஸ் பால் கவனித்தார். சில நொடிகள் உணவை மென்று சாப்பிட்டப் பிறகுதான் பிளேடு இருந்ததை கவனித்ததாகவும், அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
மேலும், இந்த உணவை ஒருவேளை குழுந்தை சாப்பிட்டு என்ன செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா ஒப்புக் கொண்ட நிலையில், சமையல் செய்யும்போது காய்கறி வெட்டும் கருவியில் இருந்த பிளேடுதான், உணவில் இருந்த பிளேடு என்பதை ஏர் இந்தியா தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா உறுதி செய்தார்.
"எங்கள் நிறுவனத்தின் விமானத்தில் பயணத்தவரின் உணவில் பிளேடு இருந்ததை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. விசாரணைக்கு பிறகு சமையல் செய்யும்போது காய்கறி வெட்டும் கருவியில் இருந்த பாகம்தான், உணவில் இருந்த பிளேடு என்று கண்டறியப்பட்டது.
இனிமேல், காய்கறிகளை வெட்டிய பிறகு, இயந்திரத்தை சோதனை செய்து, இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும்" என்று ராஜேஷ் டோக்ரா தெரிவித்தார்.