‘ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியே காரணம்’ என இத்தாலியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு (2025) ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த பிஜே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விடுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானிகள், பணியாளர்கள், விமானப் பயணிகள் 241 பேர், கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் உள்பட 19 பேர் என மொத்தமாக 260 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இத்தாலியைச் சேர்ந்த கோரியர் டெல்லா செரா (Corriere della Sera) என்ற நாளிதழ், ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் ஸ்விட்ச்சை விமானி வேண்டுமென்றே ஆஃப் செய்ததால் விபத்து நேர்ந்ததாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தத் தகவலை மறுத்து, எதிர்ப்பு தெரிவித்துள்ள விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (ஏஏஐபி), அந்த நாளிதழின் கூற்றுக்கள் “தவறானவை மற்றும் அவை வெறும் ஊகங்கள்” என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள், ஸ்விட்ச் தானாக ஆஃப் ஆக வாய்ப்பே இல்லையென்றும், கேப்டன் சுமீத் சபர்வால் ஸ்விட்ச்சை ஆஃப் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில் ‘விமானியின் பங்கு என்ன?’ என்பது குறித்தும், அகமதாபாத் ஏர் இந்தியா விபத்துக்கு சில நொடிகளுக்கு முன், எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டுள்ளது. மூத்த பைலட் சுமீத் சபர்வாலிடம் துணை பைலட் விசாரித்தபோதும் அவர் அமைதியாக இருந்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தித்தாளின் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.