2 ஆவது நாளாக நேபாளம் செல்ல முடியாமல் திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்! பயணிகள் போராட்டம்!
பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து...
பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிர்வாகத்திற்கு எதிராகப் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை (பிப். 26) காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஏராளமான பயணிகளுடன் நேபாளத்தின் காத்மாண்டு நகரத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.
ஆனால், புறப்பட்ட சில மணிநேரங்களில் நேபாளத்தில் தரையிறங்காமல் அந்த விமானம் மீண்டும் பெங்களூருக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் குறித்து விமான நிறுவனத்தின் அதிகாரிகள் எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தின் ரத்து செய்யப்பட்ட பயணம் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக நேபாளம் செல்லாமல் லக்னௌ நகரத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாகவும், தரையிறங்கியும் பல மணிநேரங்களுக்குப் பயணிகள் விமானத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் பெங்களூருக்குத் திரும்பியது.
பின்னர், பெங்களூரு விமான நிலையத்திற்குள் வந்த பயணிகள் அனைவரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தங்களது பயணத்தை வீணாக்கியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை