சிதம்பரத்தில் பல்கலைக்கழக போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: இருவர் கைது
சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த தீட்சிதர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த தீட்சிதர் உள்ளிட்ட இருவரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய சரகம் மீதிகுடி - கோவிலாம் பூண்டி இடையே சாலையோரம் பள்ளி , கல்லூரி, பல்கலைக்கழக சான்றிதழ்கள் மூட்டையாக கிடந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையில் காவல் துறையினர் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Advertisement
இதுதொடர்பாக சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர் தீட்சிதர் (37), மீதிகுடியைச் சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன் (48) ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.