சீரியலில் காலம் கடந்த காதல் கதை!
ஜெய் ஆகாஷ் - ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் புதிய தொடரின் பெயர், ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு
ஜெய் ஆகாஷ் - ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் புதிய தொடரின் பெயர் மற்றும் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சத்தைக் கிள்ளாதே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், ஜூலை 1ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய் ஆகாஷ் மூத்த நடிகர் என்பதாலும், அவர் கதையின் நாயகன் என்பதாலும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
Advertisement
Advertisement
தமிழில் ரோஜாவனம், ரோஜக்கூட்டம், கிச்சா வயசு 16 போன்ற படங்களில் ஜெய் ஆகாஷ் நடித்திருந்தார். இதோடு சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நீதானே என் பொன்வசந்தம் தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் ரேஷ்மா முரளிதரனுடன் சேர்ந்து நடிக்கிறார். தனது வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடித்து வருவதால், இந்தக் கதையில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்நிலையில், காலம் கடந்த காதல் கதை என்ற வரியுடன் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரின் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், திருமணத்துக்கு பிறகான கடந்த கால காதல் திரைக்கதையாக இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.
இத்தொடரில் நடிகை நான்சி மற்றும் சசிந்தர் ஆகியோரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன்மூலம் இவர்கள் ஜெய் ஆகாஷ் - ரேஷ்மாவின் இளமைக் கால பாத்திரங்களில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரை ஈஸ்தெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஜூலை 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.