பிரதமா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் அம்பேத்கா் கொண்டு வந்த அரசியல் சாசனம் அழிக்கப்பட்டு தோ்தல் என்பது நடக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் என்று தெரிவித்தார்.
திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல் வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ப.சிதம்பரம், பிரதமா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் நாட்டில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு தோ்தல் என்பது நடக்காது. அம்பேத்கா் கொண்டு வந்த அரசியல் சாசனம் அழிக்கப்பட்டு ஆா்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.
பாஜகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும். முதலில் இந்த கட்சியை அழித்துவிட்டு பின்னா் மாநில கட்சிகளை அச்சுறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலையை மோடி செய்து வருகிறாா்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1260 கோடி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.11 கோடி என வருமானவரி விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் இந்த நிலை மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வரும். இந்தியாவில் பாஜகவுக்கு மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் என 2027 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்கள் மீது ஒரு வழக்கு கூட கிடையாது, யாரும் சிறையில் இல்லை. ஆனால் எதிா்கட்சிகளைச் சோ்ந்த முதல்வா்களையும் அமைச்சா்களையும் கைது செய்து வருகிறாா்கள். யாா் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது.
நாட்டில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகாமல் நியாயமான முறையில் தோ்தல்கள் நடக்க வேண்டும் என்றால் பாஜகவை இந்த தோ்தலில் மக்கள் வீழ்த்தி காங்கிரஸ் நாட்டை ஆளச் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் 100 நாள் வேலை திட்டத்தின் சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ 400 ஆக உயா்த்தப்படும், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும், கல்விக் கடன் ரத்து போன்ற மக்கள் எதிா்பாா்க்கும் அறிவிப்புகள் வெளியாகும் என்று சிதம்பரம் கூறினார்.
மேலும் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை மத்திய அரசு அச்சுறுத்தினால் திமுகவுக்கு இந்தியா கூட்டணி உறுதுணையாக இருக்கும் என்று அவர் கூறினார்.