பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு!
பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நோயாளி, அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு மாதங்களில் இறந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், அமெரிக்கவின் மசாச்சுசெட்ஸ் பொது மருத்துவமனையில், 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு, சிறுநீரகம் மிக மோசமாக பாதிப்படைந்ததால், உலகிலேயே முதல்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டது.
ஒரு உயிரினத்தின் உறுப்புகள் அல்லது திசுக்களை வேறொரு உயிரினத்திற்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தும் வேறு இன உறுப்பு உறுப்பு மாற்று சிகிச்சை முறையில் இந்த சாதனை ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. தற்போது, சிகிச்சை முடிந்து 2 மாதங்களில் ஸ்லேமேன் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்லேமேனின் இறப்பிற்கும் அறுவை சிகிச்சைக்கும் தொடர்பில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
“ஸ்லெமேனின் இறப்பு எங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அவர் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முன்வரும் பலரை ஊக்கப்படுத்துவார் என்பது ஆறுதலாக உள்ளது. அவரை பராமரித்த மருத்துவர் குழுவுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம். அவர்களின் அறுவை சிகிச்சையால் தான் நாங்கள் மேலும் 2 மாதங்கள் அவருடன் வாழ்ந்தோம்” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பன்றியின் சிறுநீரகத்தில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணுக்களை நீக்கி, மனித உடலுக்கு இணக்கமாக செயல்படுவதற்கு மனித மரபணுக்களை சேர்த்து இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மனித உடலுக்கு நோய்த்தொற்று அபாயத்தை அகற்ற, நன்கொடையாகப் பெறப்பட்ட பன்றியின் உடலிலிருந்து ‘போர்கைன் எண்டோஜீனஸ் ரெட்ரோவைரஸை’ சிகிச்சைக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் அகற்றியுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் ஸ்லேமேனின் இறப்பிற்குத் தங்களது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளனர். மேலும், “அவரது இறப்பு அறுவை சிகிச்சையினால் நிகழவில்லை. ஸ்லேமேன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முன்வரும் நோயாளிகள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளார். வேறு இன உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக நாங்கள் எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருப்போம்” என்று தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.