முகப்பு
தற்போதைய செய்திகள்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

பாஜகவின் வாஷிங் மெஷின் மூலம் ஊழல் கறைகள் நீக்கப்படுவதாக நாடக பாணியிலான பிரசாரத்தை ஆம் ஆத்மியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 15 மே, 2024 at 7:27 AM
ஆம் ஆத்மி கட்சியினரின் ‘வாஷிங் மெஷின் பிரசாரம்’
பகிர்:

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேளையில் ‘வாஷிங் மெஷின் பிரசாரம்’ என்ற புதிய முறையிலான நாடக பாணி பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி கையிலெடுத்து அரங்கேற்றி வருகிறது.

ஊழல் குற்றம் சாட்டப்படும் எதிர்க்கட்சியினரை பாஜக வேட்டையாடுவதாகவும் ஆனால், அவர்கள் பாஜகவில் சேருவதாக ஒப்புக்கொண்டால் கண்கட்டி வித்தை மூலம் பாஜகவின் வாஷிங் மெஷினில் அவர்களின் ஊழல் கறைகள் நீக்கப்பட்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக நாடக பாணியிலான பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சௌரப் பரத்வாஜ், “ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய பாஜகவின் அஸ்ஸாம் முதல்வருமான ஹிமாந்த் பிஸ்வா ஷர்மா, மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவரும் தற்போதைய பாஜகவின் மகாராஷ்டிரத் துணை முதல்வருமான அஜித் பவார், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் இன்றைய பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான் அஷோக் சவான் மீதான குற்றங்கள் பாஜகவில் இணைந்ததும் அகற்றப்பட்டன.

சாரதா ஊழலில், ஹிமாந்த் பிஸ்வாஸ் சர்மாவுக்கு தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டி பிரசாரங்களை மேற்கொண்டு வந்த பாஜக, அவரைக் கட்சியில் இணைத்துக்கொண்ட பிறகு அவரின் அனைத்து கறைகளையும் நீக்கிவிட்டது.

பாஜகவின் வாஷிங் மெஷினில் துவைக்கப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத் துறையின் தொந்தரவு அவர்களுக்கு இருக்காது” என்று கூறினார்.

”மற்றொருபுறம், தில்லியில் கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்திய மனிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் பாஜகவின் அழுத்ததிற்கு அடிபணியாமல் இருந்ததால், பாஜகவின் அரசு அமைப்புகள் புனையப்பட்ட வழக்குகள் மூலம் அவர்களை சிறையிலடைத்தன.

பாஜக, அரசின் அமைப்புகள் அனைத்தையும் தனது சொந்த நலனுக்காகத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீது ஆதர்ஷ் குடியிருப்புத் திட்ட ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குடியிருப்பு இராணுவ வீரர்களுக்கும், கார்கில் போரில் இறந்த வீரர்களின் மனைவிகளுக்கும் வழங்குவதற்காகக் கட்டப்பட்டன. ஆனால், அது வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவருக்குக் குறிவைத்தார். தற்போது அஷோக் சவான் பாஜகவில் இருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மியின் தில்லி அமைச்சர் கோபால் ராய் பேசுகையில், ”மோடியும், பாஜகவும் இந்தமுறைத் தேர்தலில் ஊழலை ஒழிக்கப் போராடுவதாகக் கூறி வருகின்றனர். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.